சபாநாயகர் மட்டுமன்றி, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையும் சட்டவிரோதமாகச் செயற்படுகின்றதெனத் தெரிவித்த தேசிய மக்கள்
சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போதைய பாராளுமன்றத்தில் கூட மக்களின் நம்பிக்கை முற்றாக உடைக்கப்பட்டுள்ளதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த யாப்பா அபேவர்தன, 1987ஆம் ஆண்டு தனது மனசாட்சிக்கு இணங்க செயற்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்துகொண்டதாகவும் அன்று அவர் மனசாட்சிக்கு இணங்க செயற்பட்டாலும், காலப்போக்கில் முற்றாக மாறி, அரசாங்கத்தின் ஓர் ஒட்டுண்ணியாக மாறி, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்தில் எந்தப் பதவியை வகிக்கும் அதிகாரிகளும், அந்தந்தப் பதவிக்கான பொறுப்புகளை ஏற்கத் தவறி வருகின்றனர் என்று, ”பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு, தேர்தல் வேட்பாளரின் நடத்தைக்கு நிகரானதே” என்று குறிப்பிட்டு, வவுனியா பிரதேசத்தில் பெரிய கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அநுரகுமார எம்.பி, ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாடு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மஹிந்த யாப்பாவும் அந்த கலாசாரத்திற்கு பலியாகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
பொது நிலைமைக்கு மேலதிகமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தனிப்பட்ட செயற்பாடுகள், ஓர் ஒட்டுண்ணியாகக் காணப்படுவதால்ஈ நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்றும், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளராக வசந்த யாப்பா அபேவர்தன, ஒருங்கிணைப்பு செயலாளராக சரத் யாப்பா அபேவர்தன, ஊடக செயலாளராக இந்துனில் யாப்பா அபேவர்தன, மற்றுமொரு அதிகாரியாக சாமர சி யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர தெரிவித்தார்.
வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, அது தமது குடும்பம்சார் வெளிநாட்டுப் பயணமாக மாற்றியதன் மூலம், சபாநாயகர் தனது தலைமுறை ஒட்டுண்ணித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.