முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா, அல்லது பொதுத் தேர்தலா என்ற வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. இது
தொடர்பான வாக்குவாதங்கள், மொட்டுக் கட்சிக்குள் வலுப் பெற்றிருக்கின்றன என்றும் தெரியவருகிறது.
“முதலில் பொதுத் தேர்தலை நடத்தப்பட வேண்டும். அப்படியானால், எமக்கு சில நன்மைகள் உண்டு” என்று, பெசிலைப் போலவே, பெசிலின் சகாக்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது நல்லது என்ற கருத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் வந்துள்ளாராம்.
முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்பது தனது தனிப்பட்ட விருப்பமென்று, ஊடகமொன்றுக்கு மஹிந்த தெரிவித்திருக்கிறார். “இரண்டையும் ஒரே தடவையில் நடத்த முடியாது. பொதுத் தேர்தலை நடத்தியபின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதுதான் சாதகமாக அமையும்” என்று, மஹிந்த குறிப்பிட்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து, கட்சியுடன் கலந்துரையாடப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட்ட வேண்டுமென்று, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட அமைச்சர்கள் குழு பிடிவாதமாக உள்ளது. “பொதுத் தேர்தலை நடத்துவதை விட, இந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதுதான் வசதியானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், இன்னும் சிலர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், என்ன நடக்கிறது என காத்திருக்கின்றனர்.
பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு, பெசில் தரப்பு ஜனாதிபதிக்கு எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், ஜனாதிபதி இதுவரை பச்சைக்கொடி காட்டிவில்லை. உள்ளே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ஷ, தனி அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
“என்ன செய்வது? நாம் மீண்டும் இணைந்து வேலை செய்வோம்” என்று கூறி, மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட ஏற்றுக்கொள்ளக்கூடிய செல்வாக்குமிக்க பிரமுகர்களை கட்சிக்கு மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையில், பெசில் ராஜபக்ஷ ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
பெசில் ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தமை, மிகவும் விசேடமான விடயமாகும். இப்போதும் மொட்டுக் கட்சியில் உள்ள பல தொழிற்சங்கங்கள், லன்சா தரப்பின் புதிய கூட்டணியில் இணைந்துள்ளன. இவர்களை உடைத்து தனித்தனியாக சேர்த்துக்கொண்டதால்தான், பெசில் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால் அது தற்போது, காலந்தாண்டிய செயலென்றே, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.