கட்சிக்குள் ஏற்படும் பிளவுகளைத் தவிர்க்கும் நோக்கத்தில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு, உத்தியோகபூர்வமற்ற
ஆதரவை வழங்குவதாகவும் அதற்காக, மொட்டுக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதில்லை என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டுச் சின்னம்) தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 20ஆம் திகதியன்று, பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், பெசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டது.
அங்கு, இக்கட்டான நேரத்தில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவை மறக்க முடியாது என, பெசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாமல் ராஜபக்ஷவின் ஊடாக வேட்பாளரை நிறுத்தவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவோ கட்சி தீர்மானித்தால், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு, அக்கட்சியில் இருந்து பிரிந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, கட்சியின் ஒற்றுமைக்காக, மொட்டுக் கட்சியின் சார்பில் வேட்பாளரை முன்னிறுத்தப்போவதில்லை என்று, பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.