நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,
நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, இளம் பெண்ணொருவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கான அறிவிப்பு, ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கண்டி நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, முன்னாள் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் நெருக்கடி ஏற்படும். எனவே பெரும்பாலும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதாவது, இந்த நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
“ஏனென்றால் 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
“நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ளார். இந்த நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாகவே இதனை கருத வேண்டும்” என்று, ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.