அலவ்வ பிரதேசத்தை ஊடறுத்து ஓடும் மஹா ஓயா ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று,
இன்று (27) மாலை சம்பவித்துள்ளது.
இவர்களுடன் நீராடிய மற்றுமொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், பொல்கஹாவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இன்றைய தினம் பாடசாலை முடிந்ததும், குறித்த பகுதியில் அமைந்துள்ள நண்பரொருவரின் வீட்டுக்கே, அந்த மாணவர்கள் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள், மா ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
சுமார் 30 ஆழமான குழிகள் இருந்த பகுதியிலேயே, அந்த மாணவர்கள் மூழ்கியுள்ளனர். இதன்போது, ஏனைய மாணவர்களின் கூச்சல் சத்தத்தைத் கேட்டு, பிரதேசவாசிகள் அங்கு கூடியுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள், பொல்கஹாவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளைய தினம், பிரேத பரிசோதனைகள் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.