பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில், நேற்று (27)
புதன்கிழமை, தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை, கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் முற்றாக நிராகரித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.
"தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது, தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக மட்டுமே அமையும்.
“தொழிலார்களுக்கு நாம் ஊக்கத் தொகையை கோரவில்லை. மாறாக, சம்பள உயர்வையே கோரினோம்” என, இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.
இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர, அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் முயற்சிகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம், தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.