திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல்
இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பௌத்த தேரர்களால் நேற்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை - கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தேரர்கள் குறிப்பிட்டதாவது,
“திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.
“துறைமுக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4,445 குடும்பங்களை விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“கடந்த காலங்களில் திமுதுகம - கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.
“அதேபோன்று, சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
“இவ்வாறான விடயங்களைத் தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
“திருகோணமலையில் பௌத்த மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் நிகழ்ச்சி நிரல்களும் மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும், எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.
“திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு இடமளிக்க மாட்டோம்” என, திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி தெரிவித்தார்.