கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு
இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதேவேளை, ஞானசார தேரருக்கு மத நிந்தனைக்காக 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்படியாக உள்ளது என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுபற்றி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவிக்கையில்,
“ஞானசார தேரருக்கான தீர்ப்பு மதங்களை மோசமாக நிந்தனை செய்யும் சகலருக்கும் படிப்பினையாகும். இதனை ஒரு படிப்பினையாக கொண்டு மதங்களுக்கிடையில் அன்பையும், சகிப்புத்தன்மையையும் உண்டாக்க சகல மத தலைவர்களும் முன் வருவதுடன் அத்தகைய செயற்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது” என்றார்.