பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணமடைந்துள்ளார். பொல்லாதவன், விஜயின் பைரவா உள்ளிட்ட
படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி.
சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதேபோல், பைரவா, வட சென்னை ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். அதிலும் வட சென்னையில் தம்பியாகவே வாழ்ந்து இருப்பார் டேனியல் பாலாஜி.
48 வயதான டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானர்.
டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கள்ல் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.
சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த பாலாஜி, அந்த நாடகத்தில் டேனியல் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். வில்லனாக இவரது தனித்துவமான நடிப்பு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் பாலாஜியை பிரபலம் ஆக்கியது. இதனால், அவரது பெயர் டேனியல் பாலாஜி என்றே அறியப்பட்டது.
திரையுலகிற்கு சென்ற டேனியல் பாலஜி, தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த 'காக்க காக்க' படத்தில் ஸ்ரீகாந்த் என்ற பொலிஸ் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. டேனியல் பாலாஜியின் தனித்த குரல், மேனரிசம், உடல் மொழி ஆகியவை வில்லன் கதாப்பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி போனது. இதனால் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கதாநாயகனுக்கு சரிசமகாக பெயரும் புகழையும் பெற்றார்.
டேனியல் பாலாஜி, 48 வயதிலேயெ உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரைப்பட நடிகர்களும் டேனியல் பாலாஜி மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.