எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, இனவாதக் கலவரங்களை ஏற்படுத்த, சில சக்திகள் முயற்சித்து வருவதாக, ஐக்கிய குடியரசு
முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான இன, மத வேறுபாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு, தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்துகின்றார்.
ஈஸ்டர் தாக்குதலானது, அவ்வாறானதொரு சக்தியின் செயலாக இருக்கலாம் எனக் கூறும் எம்.பி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான நிலைமையை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னரே இந்தப் பிரச்சினைக்குரிய சக்திகள் தங்களுடைய வேலைகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என்றும் அதிகாரத்தைப் பெறுவதற்காக, சமூகத்தைப் பிளவுபடுத்தி முஸ்லிம் சிங்களவர்களிடையே அவநம்பிக்கையை வளர்த்து, பௌத்த இஸ்லாம் மோதலை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.