ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை, ஜனாதிபதியின் விசேட விசாரணைக் குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம். இமாம் செயற்படுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், 2023 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 காணொளியின் மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் உள்ளிட்ட தாக்குதல்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ். மனோகரனால், இது தொடர்பான எழுத்துமூல உத்தரவு, கடந்த வியாழக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, ஏப்ரல் 2ஆம் திகதியன்று விசாரணைக் குழு முன் ஆஜராகி, அன்றைய தினம், அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கொண்டுவர வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜராகி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்குத் தெரிந்த உண்மைகளை முன்வைக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.