துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நேற்று (30)
எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (01) இந்த தீர்மானத்திற்கு தடை உத்தரவு கோரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் இந்தப் பதவிகளில் இருந்து தங்களை நீக்குவது வழக்கமானது அல்ல என்றும், ஆன்லைன் சட்டம் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் உரைக்காக அழைக்கப்பட்ட சிறப்புக் கூட்டத்திற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று நடைபெற்ற மாநாட்டின்போதே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த மாநாடு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர், அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, தொகுதி அமைப்பாளராக குணவர்தன, பொருளாளராக ஹெக்டர் பெட்மகே, சிரேஷ்ட உப தலைவராக சரத் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் நிமல் சிறிபாலவின் பதவி ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.