இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு, தந்தை செல்வா அறங்காவலர்
சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதுவேளை, தந்தை செல்வாவின் 126வது சிரார்த்த தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அஞ்சலி நிகழ்வில் விசேடமாக நினைவுப்பேருரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அ.கண்ணேராஜ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மகளிர், இளைஞர் அணி உறுப்பினர்கள், மாவட்ட கிளை,பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.