மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தும் வரை, அதுபற்றி பொதுவெளியில் கருத்து வெளியிட வேண்டாம்
என, கடந்த 27-ம் திகதி மொட்டுக் கட்சியின் நிறைவேற்று சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கட்சியின் தீர்மானங்களுக்கு புறம்பாகச் செயற்படுபவர்களை கையாள்வதற்காக, இரண்டு ஒழுக்காற்று சபைகளும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை எடுப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மீண்டும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
“இந்தத் தருணத்தில், பொதுத் தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தலே முக்கியமாகிறது, நாட்டுக்கு நிலையான அரசாங்கமொன்று அவசியம், பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஸ்திரமற்ற அரசாங்கம் உருவாகினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது, தேசிய அமைப்பாளர் பதவியில் பெசில் இருந்தால்தான் நல்லது, நாமலுக்கு இன்னும் நாள் இருக்கிறது” என்ற கருத்துக்களை, பிரசன்ன ரணதுங்க முன்வைத்து வருகிறார். அதையும், ஓடி ஒழிந்து அவர் சொல்லவில்லை. மொட்டுக் கட்சியின் அலுவலகத்துக்கே சென்று, அங்கு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் பிரசன்ன, வியாழனன்று மொட்டுக் காரியாலயத்துக்கு சென்று, அங்கு ஊடகச் சந்திப்பை நடத்தி இவ்விடயங்களைக் கூறியது மாத்திரமன்றி, ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதியுடைய எவரும், மொட்டுக் கட்சிக்குள் இப்போதைக்கு இல்லையென்றும் தெரிவித்திருந்தார். அதனால், தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு, மீண்டுமொரு வாய்ப்பைக் கொடுக்க வெண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். பசில் இலங்கைக்கு வந்ததிலிருந்தே, உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்துவந்த போது, அமைச்சர் பிரசன்ன, அதற்கு நேர்மாறான கதையையே கூறி வருகிறார்.
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, இந்தத் நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதை விட ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என, நெலும் மாவத்தை அலுவலகத்தில் வைத்து, ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த தருணத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், நிலையான அரசாங்கம் இல்லாமல் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றும் பிரசன்ன கூறினார்.
அது மாத்திரமன்றி, நாமல் ராஜபக்ஷவை மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்த விவகாரத்திலும், அமைச்சர் பிரசன்னவுக்கு நல்ல மனப்பான்மை இல்லை எனவும் தெரியவருகிறது. மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரசன்ன, பெசில் ராஜபக்ஷ அந்த பதவியில் தொடர்ந்து இருந்திருந்தால் நல்லது எனக் குறிப்பிட்டார். 2015-ம் ஆண்டில், கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெசிலின் செயற்பாடுகளை நினைவுகூர்ந்த அமைச்சர் பிரசன்ன, நாமல் பொறுப்பேற்பதும் நல்லதுதான் என்றார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமலுக்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அதற்கு அவர் தயாராக வேண்டும் எனவும், அமைச்சர் பிரசன்ன தெரிவித்துள்ளார். பிரசன்ன இதை, சும்மா சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர் ஏனோ தானோவென்று பேசுபவர் அல்லர். பெரும்பாலானம், மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான கருத்தைத்தான், எந்த அச்சமும் இல்லாமல் பிரசன்ன வெளியிட்டிருக்கிறார் என்றே தெரிகிறது. அதாவது, சித்தப்பாமாரும் பேபிமாரும் இப்போது என்னதான் சொன்னாலும், அவை too Late.