1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மலையக மக்களின் இரத்தத்தினை உறுஞ்சி சுகபோகம் அனுபவித்து வந்த தொண்டமான் பரம்பரையினர் இன்று கிழக்கில் யுத்தத்தினால்

பாதிக்கப்பட்ட மக்களை சுரண்டி வாழும் நிலையுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்ககூடாது எனவும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“செந்தில் தொண்டமான், இந்தியாவுடன் நெருங்கியவர். அவர் கிழக்கில் ஏதாவது அபிவிருத்தி செய்வார் என்று ஜனாதிபதி இவரை நியமித்தார். ஆனால் இவர், கிழக்கில் கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றார்.

இவர் வாகரையில் ஃபாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் காணிகளை கொள்ளையிடுகின்றார். கட்டுமுறிவில் இருந்து மாங்கேணி வரை இறால் வளர்ப்பிற்காக 1,100 ஹெக்டேயருக்கு மேற்பட்ட காணிகளை ஆளுநர் கொள்ளையிட முயற்சிக்கின்றார். இதனால், சுமார் 4,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுவது இவருக்கு தெரிவதில்லையா?

“தொண்டமான் குடும்பம், தொடர்ச்சியாக மற்றவர் செய்கின்ற வேலைத்திட்டங்களுக்கு போய் ஃபோஸ் கொடுப்பதையே செய்து வருகின்றனர். அட்டைக்கு தங்களது இரத்தத்தை கொடுக்கும் மலையக மக்களிடம், 333 ரூபாயை மாதச் சந்தாவாக பெற்று, அந்த மக்களிடம் பல கோடி பணத்தை தொண்டமான் பரம்பரையினர் கொள்ளையிடுகின்றனர்.

“இதேபோன்று, வாகரையில் கண்டல் தாவரம் நடும் போர்வையில் பல இலட்சங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றார். அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணிகளை இந்த ஆளுநர் கொள்ளையிடுகின்றார் என்பது உண்மை.

“1993ஆம் ஆண்டு, அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இருந்து வந்த நிலையில், தற்போது அது உப பிரதேச செயலகமாக மாற்றியிருக்கின்றார்கள். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை ஆளுநர் செந்தில் போய் சந்தித்துள்ளாரா?

“மாங்கேணியில் செந்தில் தொண்டமானின் கட்சியை சார்ந்தவருக்கு பல ஏக்கர் காணி வழங்கப்படுகிறது. அதை தடுக்க இங்கு எந்த அரசியல்வாதியும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள், மக்களுக்காக சேவை செய்யவேண்டும்.

“வாழைச்சேனை காகித ஆலை, 300 பேருடன் இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு 150 பேர்தான் வேலை செய்கிறார்கள், அங்கு இருந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

“ஜனாதிபதி, வெளிநாட்டு பணத்தை கொண்டுவந்து இங்கு அபிவிருத்தி செய்ய சொல்லுவாரே தவிர, கிழக்கில் உள்ள காணிகளை விற்பதற்கு ஜனாதிபதி ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார். இவர், ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தியே கிழக்கு மாகாண காணிகளைக் கொள்ளையிட்டு விற்பனை செய்கின்றார்.

“இது விடயத்தில், ஜனாதிபதி உடனடியாகக் கவனத்திற் கொண்டு, கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். கடந்தகால வரலாற்றை நாம் எடுத்துப் பார்க்க வேண்டும். கோட்டா ஜனாதிபதியாக வந்ததற்கு தமிழர்களின் வாக்குகளா வழி வகுத்தன?

“இன்று விலைவாசி அதிகரித்து காணப்பட்டாலும், இன்னுமொரு 5 வருடம் ரணிலுக்கே கொடுத்து பார்ப்போம். அவர் செய்யாவிடின் அவரை நாம் ஐந்த வருடத்தில் விரட்டி விடுவோம். 20 இலட்சம் வாக்குகளைப் பெறும் ஒருவரை தமிழ் வேட்பாளராக போடுவீர்களானால், அது சரி வரும். ஆனால், அப்படி நடைபெறுவதில்லையே” என, இரா.பிரபாகரன் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி