உளுந்து இறக்குமதி செய்வதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையின் வருடாந்த உளுந்துத் தேவை சுமார் 20,000
மெற்றிக் தொன்களாகும், ஆனால், சந்தைக்கு அந்த உற்பத்திகள் வருவதற்கான காலதாமதம் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில், சந்தையில் உளுந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறியப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், சந்தையில் நிலவும் உளுந்துத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, உளுந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சிறப்புப் பொருட்கள் சட்டம் விதித்துள்ள சிறப்புப் பண்டக வரிக்கு உட்பட்டு, உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, 2000 மெட்ரிக் தொன் உளுந்தை இறக்குமதி செய்வதற்கு, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.