பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் தேவையற்ற
இலாபம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் வழிமுறைகள் குழுவின் இரண்டாவது அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், தொழிலதிபர்கள் பெறும் தேவையற்ற இலாபத்தையும் வரியையும் வசூலித்து, அந்த பணத்தை மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது அரசின் பொறுப்பு.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி மதிப்பு மற்றும் சந்தை விலை குறித்து, டிஜிட்டல் பலகைகள், இணையதளங்கள் மூலம் நுகர்வோருக்கு தெரியப்படுத்துவதும், அரசின் கொள்கை முடிவுகளால் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதும் அவசியம்.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முக்கிய பண்டிகை நிகழ்வுகள் நடைபெறவுள்ள எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர், வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நடைமுறை மற்றும் வழிமுறைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, நேற்றைய தினம் (05), புறக்கோட்டையிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்குச் சென்றதோடு, நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கியதோடு, சந்தை ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
பண்டிகைக் காலத்தில், நுகர்வோரைச் சுரண்டும் நடவடிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், இது விடயத்தில் நுகர்வோர் விவகார ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.