யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கா வந்தபோது 3 தடவைகள் தொலைபேசியில்
அழைத்தமையின் நிமித்தம் நேரடியாகச் சென்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை எனவும், அழையா விருந்தாளியாக வந்தவரையே வந்தாரை வரவேற்கும் பண்பிற்கமைய வரவேற்றோம் என்வும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் -
“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்கா அன்றுமாலை 3 தடவைகள் தொலைபேசியில் நேரடியாக அழைப்பெடுத்து எனக்கு அழைப்பு விடுத்தார். இதன்போது கூட்டத்திலும் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இருந்தபோதும் கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது, கூட்டம் நிறைவுற்றதும் சந்திக்கின்றேன் எனக்கூறி கூட்டம் நிறைவுபெறும் எனக் கூறப்பட்ட நேரத்திற்குச் சென்றேன். அப்போதும் கூட்டம் நிறைவுபெறாத சூழலில் காத்திருந்து சந்தித்தேன். இதேநேரம் அநுரகுமார திஸாநாயக்கவிடம் நான் பேசியவற்றைச் சந்திரசேகரனிற்கு கூறவேண்டிய கட்டாயம் கிடையாது.
அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ, எனக்கோ கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எமது கட்சியின் சிறிதரனை விட, அநுரவுக்கு எவ்வளவு தெரியும் எனபவை உள்ளிட்ட ஏனைய விடயங்களையும் இடம்பெற்றவைகளையும் அவர் தனது தலைவரிடமேகேட்டு அறிந்துகொள்ள முடியும்” என்றார்.