இளைஞர் ஒருவர் தனது காதலியையும் காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ். இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான குணதிலகம் பிரணவன் எனும் இளைஞரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் காதலர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை வேளை காதலியின் வீட்டுக்குச் சென்று மறைந்திருந்த இளைஞர், வீட்டார் காலை வீட்டின் கதவைத் திறந்தவேளை நுழைந்து, காதலியையும், அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சத்தம் கேட்டுக் கூடிய அயலவர்கள், பாரிய வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட தாயையும் மகளையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த காணி ஒன்றில், மேற்படி இளைஞர் தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.