கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையமொன்றில் உணவு வாங்க வந்த வெளிநாட்டு உல்லாசப்
பயணி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில், கடை உரிமையாளர் ஒருவர், வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலை குறித்து கேட்டபோது, 1900 ரூபாய் என்று கடை உரிமையாளர் கூறியபோது, வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் அவரைத் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.