கண்டி புசல்லாவையில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எனக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எனது புகாரை நான் வழங்கியிருக்கின்றேன். எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செல்லமுத்து மற்றும் அவருடைய மகன்களும் தோட்ட கம்பனியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வசிக்கின்றனர். அவருடைய மகன் அந்த தோட்ட கம்பனியிலேயே எழுதுவினைஞராக பணியாற்றுகின்றார். எனவே, இது தொடர்பில் எனக்கு சந்தேகம் எழுகின்றது.
இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட கம்பனிகளும் இணைந்து நாங்கள் அவர்களுக்கு எதிராக மக்களுடைய உரிமைகளுக்காக பேசுகின்ற காரணத்தால் எங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் வன்முறை கலாச்சாரத்தை எதிர்க்கின்றோம், வன்முறை அரசியலையும் எதிர்க்கின்றோம், கருத்து சுதந்திரத்தை மதிக்கின்றோம்.
எம்மிடம் அடியாட்கள் இல்லை, சலுகைக்கு விலை போகின்றவர்களும் இல்லை, கூலிக்கு அரசியல் செய்பவர்களும் இல்லை.
எனவே, எம்மை ஜனநாயக வழியில் செயற்பட அனுமதியளியுங்கள். எமக்கான நீதியை விரைந்து பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேவேளை முதலில் எனக்கு அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் மீண்டும் 23 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றின் போது அதேபாணியில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
எனவே, இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.