தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு பிரதான கட்சிகள் தற்போது தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் மகாஜன எக்சத் பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவது எனவும், அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஒத்த கருத்துடைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியை உருவாக்குவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் புதிய அரசியல் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் ஒரு தரப்பு வலியுறுத்தியது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி. மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடனை இலங்கை பெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரசாரத்தைத் தொடங்குவார் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுவதற்கு மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.