“அரகலய” போராட்டத்தின் போது எரித்து நாசமாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன்
பெர்னாண்டோவின் குருநாகல் – வில்கொட கட்சி அலுவலகம், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்விற்கு வருவதை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பெரும்பாலானோருக்கு முதலில் தெரியாது. தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும் என முதலில் கூறப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் எதிர்பாராத வருகை, நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் திடீர் வருகையால் பெருந்திரளான மக்கள் அவரை வரவேற்க முற்பட்டுள்ளனர்.
அங்கு உரையாற்றிய மஹிந்த, “இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரச்சாரத்தை, நான் இந்த அலுவலகத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன்” என, நினைவு கூர்ந்தார். “இந்த அலுவலகம் முன்பை விட இன்று அழகாக இருக்கிறது” என, அவர் மக்களிடம் மேலும் தெரிவித்துள்ளார்.