ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) சிறைகளில் உள்ள
44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரச உத்தரவின் பேரில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் பேரில் மன்னிப்பு பெற்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்கள் உரிய நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்யும் என்று அது மேலும் கூறியது.
இதேவேளை,, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, இந்த இலங்கையர்களை மன்னிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.