பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிமார்
வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பிலிருந்து வழக்குத் தொடர ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு வழக்குத் தொடரப்பட்டால் முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1, 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் வெளியிட்டார்.
இதேவேளை, தோட்ட கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது..