நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி
உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளிலிருந்து அவரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த மனு இன்று (06) அழைக்கப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரகோன் உத்தரவிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினால் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை இணைத்துக் கொண்டமை தொடர்பில் தாம் வழங்கிய அறிக்கையின் பின்னர் தன்னைக் கட்சி அங்கத்துவம் மற்றும் கட்சியில் தான் வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர்கள் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பை மீளாய்வு செய்து சரத் பொன்சேகா பெற்றுள்ள தடை உத்தரவுகளை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மீளாய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.