துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குற்றக் கும்பலின் தலைவனான
மன்னா ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ் பிரிய ஜனக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (07) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நபருடன் சிஐடி அதிகாரிகள் அடங்கிய விசேட குழு இன்று (07) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 'மன்னா ரமேஷ்' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரிய ஜனக கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததது.
இதனையடுத்து தேடப்பட்டு வந்த குற்றவாளியை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு துபாய் பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் வருவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
'மன்னா ரமேஷ்' அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவார்.
மன்னா ரமேஷிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.