தனியார் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரி ஒருவருடன் தொடர்பு
வைத்திருந்ததற்காக அவரிடமிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பின்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதவெல்ல வீதியில் வசிக்கும் 41 வயதான திருமணமான நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டாளர் கொழும்பில் உள்ள இரவு விடுதியில் சந்தேக நபர் அறிமுகமானதாகவும் பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியிருந்த சந்தேகநபர், மற்றுமொரு இளைஞருடன் இணைந்து வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து நவீன மடிக்கணி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, பெறுமதிமிக்க கைக்கடிகாரங்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பொருட்கள் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பின்வத்தை பொலிஸாரால் அவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.