இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி போலந்தில் தொழில் வழங்குவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்
பு நிறுவனம் ஒன்று பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டது.
இராஜகிரிய பிரதேசத்தில் வீசா ஆலோசனை நிலையம் என்ற போர்வையில் இந்த நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது.
போலந்தில் வேலை வழங்குவதற்காக கூறி ஒரு இலட்சம் ரூபாவை தன்னிடம் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால், உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை எனவும் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, சோதனை நடத்தப்பட்டு, அந்த இடத்தின் உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளான ரவீந்திர அபேபால, இந்துனில் புஷ்பகுமார, புத்திக விதானபத்திரன, மதுஷான் விஜேவர்தன மற்றும் கயேஷா சுபாஷினி ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.