தம்புள்ளை திகம்பத்தஹா முகாமுக்கு அருகில்
நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற கெப் மற்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியே ஒரு பெண் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தார்.
ஹபரணை, ஹிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஹபரணையில் இருந்து தம்புள்ளை நோக்கி தயிர் ஏற்றிச் சென்ற லொறியும், கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் கெப் வண்டியில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாகவும் சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப் சாரதி கவனக் குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீகிரிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.