ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு தொகுதியில் கொழும்பு மாநகர சபைக்கான
மேயர் வேட்பாளராக இருந்த முஜிபுர் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சியின் மேயர் வேட்பாளர் பதவி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் பதவி நீக்கம் காரணமாக வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பொருத்தமானவர் என அக்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.
இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பில் கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக 2023 ஜனவரியில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதேவேளை, முஜிபுர் ரஹ்மான் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக இருந்த போதிலும், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக அவர் தகுதியற்றவர் எனவும் வேறு யாருடைய பெயரையும் அதில் சேர்க்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.