அப்பாவி நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி அவர்களின்
உயிருக்குப் பாதுகாப்பற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சந்தேக நபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் மனிதப் படுகொலை வகையைச் சேர்ந்தது எனவும், இவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் தரவு அறிக்கைகளின்படி, நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற மருந்துகளால் பல மரணங்கள் பதிவாகியுள்ளன, நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 100 ஐ நெருங்குகிறது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் தரமற்ற மருந்துகளை விநியோகித்தவர் உட்பட சுகாதார அமைச்சின் எட்டு அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்கு சுகாதார அமைச்சின் பூரண ஆதரவைப் பெறவும் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.