பாறுக் ஷிஹான்
-------------------
நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில்
ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (13) திங்கட்கிழமை குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோது மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கணக்களாரிடம் ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் கைப்பற்றபட்டன.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளரான இவர் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.