பாறுக் ஷிஹான்
----------------------------
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன், அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்து குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்தது.
எனினும் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தனிடம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர்.