தென்மேற்கு பருவமழை படிப்படியாக
நாட்டுக்கு மேல் நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னரும் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள வளிமண்டலவியல் நிபுணர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்தார்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,கடும் மழை காரணமாக களு, நில்வலா, களனி, கிங் மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.
ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பிரதேசங்களில் மேலும் மழை பெய்தால் அதனை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகள் நிரம்பி நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.