குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மக்களில் பலர் தற்போதும்
தன்னிடம் மன்னிப்புக் கோருவதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கூறுகிறார்.
எதிர்கால சந்ததியினர் இலங்கையில் மகிழ்ச்சியாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த பௌத்த நாடு என்றாவது ஒரு நாள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனவும் தாம் நம்புவதால் நாட்டை விட்டு வெளியேறத் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'சட்டம், விஞ்ஞானம் மற்றும் வெகுஜன ஊடகங்களை புறநிலை நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் மே 21ஆம் திகதி கொழும்பில் 'உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள்' ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி ஷாபி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கட்டாய விடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டொக்டர் ஷாபி, பின்னர் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் பணிக்கு திரும்பினார்..