இலஞ்சம் மற்றும் முறைகேடான
செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 40 அரசியல்வாதிகள் குறித்து
விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் அரசியல்வாதிகள் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக தொழில்நுட்ப பிழைகள் காரணமாக வாபஸ் பெறப்பட்ட அனைத்து வழக்குகளையும் மீள எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதிய விசாரணை ஆணைக்குழுவின் கீழ் அனைத்து விசாரணைகளையும் தீவிரமாக நடத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.