சீரற்ற காலநிலை காரணமாக
நாடளாவிய ரீதியில் 33,462 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் தரவு அறிக்கைகளின்படி, இன்றைய (26) நிலவரப்படி, தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணங்களிலேயே அதிகளவான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
நேற்று (25) காலை நிலவரப்படி, 38,470 மின் தடைகள் ஏற்பட்டிருந்த போதிலும், மாலை வரை அவற்றில் 5,000 க்கும் அதிகமானவை சீர் செய்யப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
மற்றைய இணைப்புகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அனர்த்த நிலைமைகளின் கீழ் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், சில பிரதேசங்களில் அதிகளவான விநியோக மின்னழுத்த மின் கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்துள்ளமையினால் மீளமைக்கப்பட்ட இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய நிலையில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையை சீர் செய்வதற்கு மிகக் குறைவான பணியாளர்களே உள்ளதாகவும் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மின்சார சபை சங்கம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, மின் தடையை சீர்செய்வதற்காக மேலதிக சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பையோ அல்லது குறுஞ்செய்தி ஒன்றையோ அனுப்பி மின்சாரம் துண்டிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.