நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட
வெளிநாட்டு பயண தடையை மீறி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் ஊடக முகாமையாளர் கோபிநாத் சிவராஜாவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரகசியமாக வெளிநாடு செல்ல முற்பட்டபோது, கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
விளையாட்டு நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனத்திடம் பணம் பெற்று ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படும் கோபிநாத் சிவராஜா, டான்ஸ் ஸ்போர்ட் ஸ்ரீலங்கா என்ற விளையாட்டு சங்கத்தின் செயலாளராக தன்னைக் காட்டி, விளையாட்டு நிறுவனங்களுக்கு என்று பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.