ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக்
கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினால் சிலாபம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் தளம் ஒன்றில் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே இந்த இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு , விசேட பொலிஸ் குழுவினரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். .
இந்த இரண்டு சகோதரர்களும் சிலாபம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.