தொழில் அமைச்சரினால் குறைந்த
பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி 21 தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனு தொடர்பான உண்மைகளை இம்மாதம் 31ஆம் திகதி உறுதிப்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அகரபதன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 தோட்டக் கம்பனிகளினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழில் ஆணையாளர் உட்பட 52 பேரைக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,350 ரூபா மற்றும் 300 ரூபாவும் மற்றுமொரு கொடுப்பனவாக 80 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து தொழில் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக மனுதாரர் தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன.
கடந்த வருடம் இடம்பெற்ற மே தினக் கூட்டங்களிலும் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில் அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்
மனுதார தோட்டக் கம்பனிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி அப்ரூவும் ஆஜராகியிருந்தனர்.