இராணுவத் தளபதியைப் பற்றி தவறான,
வெறுக்கத்தக்க, அவதூறான வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியமை தொடர்பில் சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்கவுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அழைப்பாணையை அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி இன்று நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விவாதங்களை பரிசீலித்த பிரதான நீதவான், அவதூறான வீடியோ அறிக்கைகள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் மற்றும் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் பிரதிவாதிக்கு நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவைப் பிறப்பித்து அவரை ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்