மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனையை
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தால் ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்த முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் ஆனால் மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்தது.
எனவே, குறித்த பிரேரணை கிடைக்கப்பெற்றதும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் அமுல்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ வருடாந்த மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி மின்சார கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும்.