பாறுக் ஷிஹான்
கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில்
ஏற்பட்ட சம்பவத்தையடுத்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞரை தாக்கிய சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி பின்னர் தானும் தாக்கப்பட்டதாகக் கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தபோதே அங்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் அவரைக் கைது செய்து வைத்தியசாலையில் பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகிறது எனக் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வருவதாக இளைஞனின் தரப்பினர் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில். கடந்த வியாழக்கிழமை (30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்யும் 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞர் நகைக்கடை உரிமையாளர் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனைடுத்து குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் தானும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.