நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில்
தூர நோக்கோடு நன்கு சிந்தித்து நாட்டினதும் மக்களினதும் விமோசன் கருதி வாக்களிக்க வேண்டும். நாம் வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த படுகுழியில் மீண்டும் ஒருமுறை விழுந்து விடாமல் புத்திசாலித்தனமாக தீர்மானம் ஒன்றை எடுத்தால் அது பயனுள்ளதாக அமையும் மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியா ஸ் பாக்கீர் மாகக்கார் கூறினார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்தியாஸ் எம்.பி. மேலும் கூறியதாவது அரசியலமைப்பின்படி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எவருக்கும் முடியாது அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தேர்தலை எவருக்கும் பின் போட முடியாது.எந்த ஒரு தேர்தல் தொடர்பிலும் அறிவிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு முடிவெடுக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத் தேர்தலை நடத்த தேவையில்லை என்று கூறியிருப்பது பற்றி நான் அதிர்ச்சி அடைகிறேன். ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் ஜனநாயகத்தை கட்டி காப்பவர்கள் என்று சொல்லும் ஒருவரின் நாவில் இருந்து இப்படியான கூற்று வரவே முடியாது.
அரசியலில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் ஒருவரின் நாவினால் இவ்வாறான வார்த்தை வெளிவருவதாயின் அவர் ஹிட்லரின்,மொசாட்டின் உறவினராகவே இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
வரலாற்றில் நடந்த சம்பவங்களை,விடயங்களை நினைவில் வைத்து நடைபெறவுள்ள தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். தேர்தல் ஒன்று நெருங்கும் போது எப்போதும் ஏதாவது பூச்சாண்டி காட்டுவது வழமையாகி விட்டதை நாம் காண்கிறோம்.
அது தேசிய அரசியல் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவே இருக்கும்.சில சமயங்களில் அது சர்வதேச அரசியலில் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அமைந்திருக்கும். இப்படியான பூச்சாண்டிகளை நாங்கள் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் காண்கிறோம்.
எனவே வரலாற்றில் பாடம் கற்றுக் கொண்டு மீண்டுமொரு முறை படு குழியில் விழுந்து விடாமல் எதிர்வரும் தேர்தலில் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுப்பது மக்கள் பொறுப்பாகும். தவறான தீர்மானம் எடுத்தால் நாடு அதல பாதாளத்திற்குச் செல்லும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.