பெண்களுக்கு தகாத ஆலோசனைகளை
வழங்கி ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பிரிவு பிரதானி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த திகதிக்கு முன்னர் ஓய்வுபெற அந்த பிரதானி தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதானி மீதான பிரதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதித்தல் தொடர்பில் சபாநாயகரே முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த பிரதானி தனது பிரிவுக்கு பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் பதவி உயர்வு வழங்கும்போது பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான எழுத்துபூர்வ ஆதாரங்கள் பல சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ன.
இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் சில காலத்துக்கு முன்னர் இந்த அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.