(நூருல் ஹுதா உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த மே 8 ஆம் திகதி பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் ரபா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பிலும் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எகிப்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இடி விழுந்து சாக வேண்டும் என்றும் கூறியிருந்த அவர் “இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவையும் அந்நாட்டின் கொடுங்கோல் இராணுவத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்தில் உள்ள எகிப்து ஜனாதிபதி நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.
பலஸ்தீன மக்களைப் பலி கொடுப்பதற்காக ரபா எல்லைப் பிரதேசம் இஸ்ரேலிய இராணுவத்துக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
இதுதொடர்பில் இலங்கையிலுள்ள எகிப்து தூதரகம் பலஸ்தீன தூதரகம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.
பலஸ்தீன விடயத்தில் எகிப்து சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் தேவையான அனைத்துவழிகளிலும் பல உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருவதாகவும் ஹரீஸ் எம்.பியின் இந்த உரை காரணமாக சர்வதேச மட்டத்தில் எகிப்தை பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவதாகவும் இதனால் பல்வேறு இக்கட்டான நிலைகள் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எகிப்து பலஸ்தீனுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறும் தெரிவித்து இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.