தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தமிழ்
அரசியல்வாதிகள்தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலை மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளேன்.
குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை அமைச்சரவையில் முன்வைத்திருந்தேன். அதற்கு ஜனாதிபதியும் உறுதிமொழி வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும். ஆகவே அவருக்குத்தான் எங்கள் ஆதரவும் இருக்கும்.
அதேவேளை, தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.