தோட்டத் தொழிலாளர்களுக்கு
குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவு தற்போதைக்கு பிறப்பிக்கப்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவு இன்று (03) பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டோரை எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.