அனர்த்தத்தின்போது தங்குமிடங்களில் தங்கியுள்ள
தனிநபர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வலியுறுத்தினார்.
கொலன்னாவ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சமூக பொலிஸாரின் ஈடுபாட்டுடன் நடமாடும் ரோந்து முறைளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ரத்நாயக்க எடுத்துரைத்தார்.
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கும்போது கடுமையான சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனர்த்த நிலைமை முடியும்வரை மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினரும் செயற்படும் வகையில் தற்காலிக நிவாரண நிலையமொன்றை நிறுவுமாறும் அவர் பணித்தார்.
டெங்கு, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) மற்றும் வயிற்றோட்டம் போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ரத்நாயக்க வலியுறுத்தினார்.
அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரச உதவியுடனும் ஆயுதப்படையினரின் பங்களிப்புடனும் புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.